புதுச்சேரி: முதலமைச்சர் விஜய், அனைத்து விவரங்களையும் தனது விரல் நுனியில் வைத்துக்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களையும், சீரிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று புகழாரம் சூட்டினார். கன்னியாஸ்திரிகளுக்கான கர்மேல் மடத்தில் 25 ஆண்டுகள் நிறைவு செய்யும் வெள்ளி விழாவில் பங்கேற்க புதுச்சேரி வந்திருந்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
"என் நெருங்கிய உறவினர் தெரசா பெனடிக், கன்னியாஸ்திரிகளுக்கான கர்மேல் மடத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி நடைபெற்ற வெள்ளி விழாவில் கலந்துகொண்டேன். தமிழக சட்டப்பேரவையில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி தொடர்வது மக்களின் விருப்பம். எம்.எல்.ஏ-க்களின் விருப்பமும் அதுதான். அதன்படி ஆட்சி தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.
கோவை சிறுமி கொலை போன்ற குற்றச் சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரபாகர், "ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதல்வர் விஜய், அனைத்து விவரங்களையும் மிகத் துல்லியமாக அறிந்திருக்கிறார். அவர் பல்வேறு திட்டங்களையும், சீரிய முயற்சிகளையும் மேற்கொள்வதை நாம் அன்றாடம் காண்கிறோம். அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பதும், நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதும் நமது கடமை" என அழுத்தம்திருத்தமாக கூறினார்.
மேலும், விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு நிலம் வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசு விடுத்துள்ள கோரிக்கை குறித்து கேட்டபோது, 'இது தொடர்பான விவரங்கள் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. உரிய நேரத்தில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டால், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்' என்று தெரிவித்தார். முதலமைச்சரின் செயல்பாடுகள் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.