இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் சரியில்லாததால், அவருக்குப் பதிலாக சுப்மன் கில், திலக் வர்மா அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் ஒருவரை கேப்டனாகக் கொண்டுவர பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மந்தமாக உள்ளது. சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து 20 ரன்களுக்குள்ளேயே ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார். சில அதிரடி ஆட்டங்களைத் தவிர்த்துப் பார்த்தால், அவரது சராசரி மிகவும் குறைந்துள்ளது. இதனால், அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருப்பதாகக் கூறப்படுகிறது.
கேப்டன் பதவிக்கான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறார். இருப்பினும், அவரது தேர்வு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முடிவைப் பொறுத்தே அமையும். 2024 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றபோது, கேப்டனாக ஸ்ரேயாஸ் இருந்தபோதிலும், ஆலோசகராக இருந்த கம்பீருக்கே அதிகப் புகழ் கிடைத்தது. இதனால் ஸ்ரேயாஸ் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது கம்பீருக்கும் ஸ்ரேயாஸுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், அதனால் ஸ்ரேயாஸின் கேப்டன் கனவுக்கு கம்பீர் தடைபோட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மற்றொருபுறம், குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐபிஎல் தொடரில் சிறப்பாக வழிநடத்தி வரும் சுப்மன் கில்லின் கேப்டன்சி மதிப்பு உயர்ந்துள்ளது. தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், கில்லை அனைத்து வடிவப் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டால், கில் தொடக்க வீரராக அணிக்குத் திரும்பலாம். அப்போது சஞ்சு சாம்சன் 3-வது இடத்திற்கும், இஷான் கிஷன் 4-வது இடத்திற்கும் மாறக்கூடும்.
மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மாவும் கேப்டன்சி ரேஸில் இணைந்துள்ளார். அவரது தலைமைத்துவப் பண்புகளை சோதிக்கும் வகையில், அவரை இந்தியா ஏ அணியின் கேப்டனாக பிசிசிஐ நியமித்துள்ளது. அங்கு அவர் சிறப்பாகச் செயல்பட்டால், இந்திய டி20 அணிக்கும் கேப்டனாக வாய்ப்புள்ளது. மேலும், 2028 ஒலிம்பிக் போட்டிகளைக் கருத்தில்கொண்டு, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் நிலைநிறுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அவருக்கு ஏற்றவாறு அணியின் கட்டமைப்பை மாற்றக்கூடிய ஒரு கேப்டனையே தேர்வுக் குழுவினர் முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.