போதை இல்லா தமிழகத்தை உருவாக்கும் இலக்குடன், தமிழக அரசு பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகளை ஒருங்கிணைத்து முக்கிய செயல்திட்டங்களை வகுத்துள்ளது. தலைமைச் செயலகத்தில் இன்று (27.05.2026) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், போதைப்பொருட்களைத் தடுப்பதற்கும், இளைய தலைமுறையினரை சாதனையாளர்களாக உருவாக்குவதற்கும் முதல்-அமைச்சர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த செயல்திட்டங்கள் விவாதிக்கப்பட்டன.
தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பல தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, காவல் துறை மூலம் போதைப்பொருட்களைத் தடுக்கும் சிறப்பு கண்காணிப்பு பிரிவு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, போதையில்லா தமிழகத்தை உருவாக்கி, இளைஞர்களை சாதனையாளர்களாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகள் இணைந்து, மாணவர்களின் கல்விக்கு நிகராக விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளன.
தற்போதைய சூழலில், மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க அவர்களின் உடல் மற்றும் மன நலம் சீராக இருப்பது அவசியம். இதை கருத்தில் கொண்டு, அறிவியல் பூர்வமான கல்வி முறையை வழங்கும் வகையில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, விளையாட்டு அறிவியலை பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த அனைத்து பள்ளிகளிலும் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து செயல்படுவார்கள். மீனவர்களின் குழந்தைகள் நீச்சல் பயிற்சியிலும், விவசாயிகள் மற்றும் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களின் குழந்தைகள் தடகள போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். இத்தகைய மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு விளையாட்டு அறிவியல் அடிப்படையிலான பயிற்சிகளை அளித்து, தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்து சாதனைகள் புரிய வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு, அரசுத் துறைகளில் 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், முதல்-அமைச்சர் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்துவதாகவும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து, மாணவர்களை உடல் மற்றும் மனதளவில் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், வலிமை உடையவர்களாகவும் திகழச் செய்ய அறிவியல் பூர்வமான கல்வியை விளையாட்டு மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து செயல்படுத்துவதாகவும் கூறினார். ஆசிரியர்களின் பங்கு மகத்தானது என்றும், இனிவரும் காலங்களில் மாணவர்களுக்கு கல்விக்கு நிகராக விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.