சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் மூன்று எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், மற்றும் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்கள் மூவரும் முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்தவர்கள் ஆவர்.
மூன்று எம்எல்ஏக்களும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். ராஜினாமா ஏற்பு குறித்து இன்று மாலைக்குள் ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தை அளித்த கையோடு, அவர்கள் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ள நிலையில், வேலுமணி அணியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறுவது, அக்கட்சியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று ராஜினாமாக்களும் ஏற்கப்பட்டால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 230 ஆகக் குறையும். ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ள நிலையில், மொத்தம் 4 தொகுதிகள் காலியாகும் நிலை ஏற்படும்.