தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திபட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சின்னபொண்ணு (55) குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இந்த துயரச் சம்பவம் குறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 06.07.2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அருகில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் மீது சரிந்து விழுந்ததில், திருமதி சின்னபொண்ணு (வயது 55), கணவர் (லேட்) காசிநாதன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் இலேசான காயம் அடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமதி சகுந்தலா (வயது 25), கணவர் முருகானந்தம் ஆகியோருக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த சின்னபொண்ணுவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி சகுந்தலாவுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த துயரச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது. கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் சற்று ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
