தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் இரண்டாவது முறை சந்தித்த பிறகும் ஆட்சி அமைக்க அழைக்கப்படாத நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்க அவருக்கு மேலும் 6 எம்எல்ஏக்கள் கட்டாயம் தேவை என்கிற நிலை உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தவெகவிடம் 108 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ஆனால் விஜய் 2 தொகுதிகளில் வென்றுள்ளதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்த பிறகு சட்டப்பேரவையின் பலம் 233ஆக குறையும்.
இதனால், பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை ஏற்படும். அதேபோல், விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டால் த.வெ.க.வின் சட்டப்பேரவை பலம் 107ஆக இருக்கும்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரின் ஆதரவு உள்ளதால் சட்டப்பேரவையில் த.வெ.க.விற்கான ஆதரவு 112ஆக அதிகரிக்கும்.
அப்படி இருந்தாலும் ஒருவரை சபாநாயகராக த.வெ.க. தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதராவாகவும், எதிராகவும் சமமான வாக்குகள் விழுந்தால் மட்டுமே சபாநாயகராக இருப்பவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களிக்க முடியும்.
இதனால், மொத்தம் உள்ள எம்எல்ஏக்கள் 232 பேரில் பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 117ஆக இருக்கும்.
ஆனால் தவெகவிற்கு ஆதரவாக மொத்தம் உள்ள 112 எம்எல்ஏக்களில் சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆரம்ப நிலையில் பங்கேற்க முடியாது என்பதால் 111 பேர் மட்டுமே வாக்களிக்க முடியும்.
இதனால் 232 எம்எல்ஏக்களில் பெரும்பான்மைக்கு தேவையான 117 எம்எல்ஏக்களை பெற தவெகவிற்கு மேலும் 6 எம்எல்ஏக்கள் கட்டாயம் தேவை.
அதே சமயம் 232 எம்எல்ஏக்களில் சரி பாதி என தலா 116 பேர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்து சமநிலையில் முடிந்தால் சபாநாயகர் தனது வாக்கை செலுத்தி விஜயை வெற்றி பெற வைக்க முடியும்.
எனவே தான் மேலும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் உள்ள தலா 2 எம்எல்ஏக்கள் என 6 பேரின் ஆதரவை பெற தவெக தீவிரம் காட்டி வருகிறது.