ஆளுநர் உரையை த.வெ.க-வினர் தம்பட்டத்திற்கே பயன்படுத்தியுள்ளனர் – உதயநிதி ஸ்டாலின்

த.வெ.க-வினர் தங்களின் பெருமைகளை பறைசாற்றிக் கொள்வதற்காகவே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

'கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவ படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. தேர்தல் பரப்புரையின்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து இன்றைய முதலமைச்சர் வீர வசனம் பேசினார். ஆனால் இன்றைய நிலையை பார்க்கும்போது, திரைப்படத்தில் வருவதுபோல், “கண்ணாடிய பார்த்து பேசிட்டு இருக்கீங்க சார்” என்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. திமுக ஆட்சியில் அரசின் எந்த உரையையும் ஆளுநர் முழுவதுமாக படித்ததே இல்லை. பல திருத்தங்களை செய்வார். இன்று தவெக அரசு தயாரித்த உரையை, ஒரு வரி கூட மாற்றாமல் படித்துள்ளார். இதிலிருந்தே தவெக – பாஜக இடையே இணக்கமான சூழல் உள்ளதோ என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. திமுக அரசு மீது காழ்ப்புணர்ச்சியுடன் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளது' என அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், 'பேரிடர் காலங்களில் உணவுப்பொருட்கள், பெட்ரோல், டீசல் உட்பட வாங்குவதுபோல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குகிறார் விஜய். த.வெ.க அரசு எழுதிக் கொடுத்ததை ஆளுநர் வாசித்துள்ளார். த.வெ.க-வினர் ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாக ஆளுநர் உரை உள்ளது. முதலமைச்சர், த.வெ.க-வினர் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக ஆளுநர் உரை' என்று விமர்சித்தார்.

'திமுக ஆட்சியில் அரசு எழுதி கொடுத்த எந்த உரையையும் ஆளுநர் படித்தது இல்லை. எங்கள் அரசின் திட்டங்களையே மீண்டும் அறிவித்துள்ளனர். மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடனே ஆளுநர் உரை அமைந்துள்ளது. தவெக – பாஜக இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதோ என எண்ண தோன்றுகிறது' என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version