போபாலில் நடிகை ட்விஷா சர்மா தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக, அவரது கணவர் சமரத் சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக ட்விஷாவின் கணவர் மற்றும் மாமியார் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 12-ம் தேதி, தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மா (33) போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இது தற்கொலை என முதலில் கூறப்பட்டாலும், வரதட்சணை கொடுமை காரணமாக அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக ட்விஷாவின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இதனையடுத்து, அவரது கணவர் சமரத் சிங் மற்றும் மாமியார் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
மாநில அரசு இந்த வழக்கை கையாள்வதில் தாமதம் காட்டுவதாகவும், உரிய விசாரணை நடைபெறவில்லை என்றும் ட்விஷாவின் பெற்றோர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதற்கிடையில், தலைமறைவாக இருந்த ட்விஷாவின் கணவர் சமரத் சிங், ஜபல்பூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சமரத் சிங்கிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக, சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை போபால் விரைந்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.