திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டின் தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியே முக்கிய காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். அண்டை நாடுகளுடனான உறவைப் பேணுவதில் மத்திய அரசு தவறியதன் விளைவாகவே இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 'பொதுமக்கள் வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்ற பிரதமரின் அறிவுரைக்கு பதிலளித்த சிவக்குமார், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தால் மட்டுமே மக்களின் சிரமங்கள் குறையும் என்றும், இல்லையெனில் பிரதமரின் அறிவுரை நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்டார்.
சமையல் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும், குறிப்பாக 'தாலிக்கு தங்கம்' போன்ற திட்டங்கள் உள்ள தமிழகத்தில், சாதாரண மக்களுக்குத் தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கனியாக மாறிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். கொரோனா காலத்தில் மக்களை விளக்கேற்றச் சொன்னது போன்ற தேவையற்ற அறிவிப்புகளைத் தவிர்த்து, மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முறையான தேசியக் கொள்கைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சித் தலைமையின் முடிவு என்றும், மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைப்பதே தங்கள் நோக்கம் என்றும் கூறி செய்தியாளர்கள் சந்திப்பை நிறைவு செய்தார்.