அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நட்டு வைத்த புனிதமான பாரிஜாத மரம் மர்மமான முறையில் காணாமல் போனதாகப் புகார் எழுந்துள்ளது. இது ஆன்மீக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி திருத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிபிஐ போன்ற சுதந்திரமான முகமையைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அனூப் பிரகாஷ் அவஸ்தி தாக்கல் செய்துள்ள இந்த மனு, கோவில் நன்கொடைகள் முறைகேடாக கையாளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கக் கோருகிறது.
மேலும், பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளின் வசூல், கணக்குப் பதிவு, பாதுகாப்பு மற்றும் செலவினங்கள் ஆகியவை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்ய, தொடர்ச்சியான நீதித்துறை கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த காணிக்கை முறைகேடு புகார்கள் தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ராமர் கோயில் பூமி பூஜையின் போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க புனித 'பாரிஜாத மரம்' அங்கிருந்து காணாமல் போனதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தற்போது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.