மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கையிருப்பு 60 நாட்களுக்குப் போதுமானதாக இருப்பதாகவும், சமையல் எரிவாயு (எல்பிஜி) கையிருப்பு 45 நாட்களுக்குத் தேவையான அளவில் இருப்பதாகவும் விளக்கமளித்தார்.
மேலும், நாட்டில் 1 கோடியே 26 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்லன. வணிக ரீதியிலான சிலிண்டர் விற்பனை 17,000 டன்களைக் கடந்துள்ளது. ஆட்டோ எல்பிஜி விற்பனை 762 டன்களைத் தாண்டியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனுடன் இயங்கி வருகின்றன.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 703 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வலுவான நிலையில் உள்ளது.
சர்வதேச அளவில் போர்ச் சூழலால் எரிபொருள் விலை 30% முதல் 70% வரை உயர்ந்த போதிலும், இந்தியாவில் விலையை அதிகரிக்காமல் அரசு மக்களைப் பாதுகாத்துள்ளது.
இதன் காரணமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்து வருவதாகவும், 2026 முதல் காலாண்டில் இந்த மொத்த இழப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கு முன்னதாக, எரிபொருள் மற்றும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கில், பெட்ரோல், டீசல் சிக்கனம், ஓராண்டுக்கு தங்கம் வாங்காதிருத்தல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல், வீட்டில் இருந்து வேலை செய்தல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.