சட்டமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று ஆரம்பமானது.
சபாநாயகர் பதவிக்கான தேர்தலில், ஆளும் கட்சியான த.வெ.க. சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜே.சி.டி. பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத காரணத்தால், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத் துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வாழ்த்துரை வழங்கிப் பேசியபோது,
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சமூக நீதிக்காகத் தொடர்ந்து பாடுபடுபவர். சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு அவைத்தலைவரும், துணைத்தலைவரும் நேர்மையாகவும் நியாயமாகவும் பேரவையை நடத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.
இந்தச் சட்டமன்றத்தில் பணியாற்றுவது எனக்குப் பெருமையாகவும் ஒரு பாக்கியமாகவும் உணர்கிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றம் எப்போதும் ஆரோக்கியமான விவாதங்களுக்குப் பெயர் பெற்றது. ஆக்கப்பூர்வமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் பேசுவதற்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் போதிய நேரம் ஒதுக்குவார் என்று நம்புகிறேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.