தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் மனிதர்களைக் கடித்து குதறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த கொடூர சம்பவங்களால் உயிரிழப்புகளும் ஏற்படுவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த கக்களூர் ஊராட்சி பகுதியில், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒரு தெரு நாய்க்கு திடீரென வெறிபிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நாய், சாலையில் சென்ற பொதுமக்கள் என அனைவரையும் கடித்துள்ளது.
குறிப்பாக, அப்பகுதி வழியாக சென்ற 3 பெண்கள் மற்றும் 15 ஆண்கள் என மொத்தம் 18 பேரை அந்த வெறிநாய் கடித்துள்ளது. திருவள்ளூர் நகராட்சி துப்புரவு பணியாளர் சரசு (47), கக்களூர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (65), சுரேஷ் (42), ரவிக்குமார் (26), பாஸ்கர் (47), லோகநாதன் (60) உட்பட 18 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஒரே நாளில் 18 பேர் வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நாயைப் பிடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.