திருவள்ளூர் மாவட்டத்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஜெகநாதன் என்ற நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு, கும்மிடிப்பூண்டி எளாவூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (35) என்பவர் வீட்டிற்குள் நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகநாதனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி உமாமகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார். விசாரணையின் முடிவில், ஜெகநாதன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதமும், பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார். இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.