சேலம் அருகே, பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம் செய்த கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, சமீபத்தில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். நேற்று முன்தினம், அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக மாணவி பைபாஸ் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த பாலகிருஷ்ணன் என்பவர் மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். மாணவி தட்டிக் கேட்டபோது, அவரிடம் சில்மிஷம் செய்து தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார்.
திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி, பாலகிருஷ்ணனை கன்னத்தில் அறைந்து சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார். மாணவியின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்துள்ளனர். நடந்ததை அறிந்த மக்கள், பாலகிருஷ்ணனை பிடித்து தர்ம அடி கொடுத்து சிறைபிடித்தனர். இதில் காயமடைந்த பாலகிருஷ்ணனை அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர் எருமாபாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (43) என்பதும், அவர் வாழப்பாடி தாலுகா பெரிய கிருஷ்ணாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.