இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இன்று (12.5.2026) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். மண்டபம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் 10.5.2026 அன்று நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். சர்வதேச எல்லையைத் தாண்டியதாகக் கூறி, இன்று அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
ஏற்கனவே 54 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.