கடந்த 18 நாட்களில் திருநெல்வேலியில் மட்டும் 17 போக்சோ குற்றங்கள் பதிவாகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'பெண் குழந்தைகளைக் காக்க வேண்டும் என பாஜக நேற்று போராட்டம் நடத்திய நிலையில், கடந்த 18 நாட்களில் திருநெல்வேலியில் மட்டும் 17 போக்சோ குற்றங்கள் பதிவாகியுள்ளதாக இன்று வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 18 நாட்களில் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் இத்தனை குற்றங்கள் பதிவாகியிருக்கிறது என்றால், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 1 மாதத்தில் தமிழகம் முழுவதும் எத்தனை குற்றங்கள் அரங்கேறியுள்ளன? எத்தனை பதிவாகாமல் மறைக்கப்பட்டுள்ளன? எத்தனை குழந்தைகளின் நலன் சீரழிக்கப்பட்டுள்ளது?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், 'அண்ணன், தாய் மாமன் என மேடைக்கு மேடைக்கு நடித்துவிட்டு, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் தமிழகக் குழந்தைகளின் பாதுகாப்பை அம்போவென தூக்கியெறிவது தான் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறிப்பிட்ட மாற்றமா?' என்றும் அவர் விமர்சித்துள்ளார். போக்சோ குற்றங்கள் பெருகும் வேளையில், முட்டுக்கொடுக்கும் வசனங்களைப் பேசுவதை விடுத்து, உடனடியாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தவெக அரசு முனைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
'குதிரை பேரம் பேசுவதிலும் ரீல்ஸ் வெளியிடுவதிலும் காட்டும் வேகத்தில் ஒரு துளியாவது தமிழக குழந்தைகளைப் பாதுகாப்பதில் காட்டினாலே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தானாக சீராகிவிடும்!' என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.