சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், மாநிலத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை விளக்கக்காட்சிகளுடன் வெளியிட்டார். இந்த அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் இரு மடங்காக உயர்ந்து, 2021-ல் 5 லட்சம் கோடியாக இருந்தது தற்போது 10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் 3,18,176 கோடி ரூபாய் கடனையும் சேர்த்தால், மாநிலத்தின் மொத்தக் கடன் 13.18 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதனால், ஒவ்வொரு தனிநபர் மீதும் 1.28 லட்சம் ரூபாய் கடன் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், வருவாய் பற்றாக்குறை கோவிட் தொற்று பரவிய ஆண்டை விட அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு பல மாநிலங்கள் நிதி நிலையை சீரமைத்து முன்னேற்றம் கண்ட நிலையில், தமிழ்நாடு மட்டும் நிதி சீரமைப்பில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தமிழ்நாட்டின் முதல் 60 ஆண்டுகளில் திரட்டிய கடனை விட, கடந்த 2021-2025 காலகட்டத்தில் வாங்கிய கடன் அதிகம். கடந்த ஐந்து ஆண்டுகளில் கடனுக்கான வட்டி செலுத்தும் அளவு 61 சதவீதம் அதிகரித்துள்ளது. வருவாய் பற்றாக்குறை 78,324 கோடியாக உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட தமிழகம் பின்தங்கியுள்ளது என்றும் அமைச்சர் மரிய வில்சன் விளக்கினார்.
இந்நிலையில், தவெக அரசின் இந்த வெள்ளை அறிக்கை ஒரு வெற்று அறிக்கை என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: 'வாணவேடிக்கை வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, நிர்வாகத் திறமையின்மையாலும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் 'புஸ்வானமாக' மாறிவிட்டதை மறைக்க, 'ஹைப்' ஏற்றிய அறிக்கை ஒன்றை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு, அதனையும் 'ஃப்ளாப்' ஆக்கியுள்ளது.'
'கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி பொதுமக்கள் போராடத் தொடங்குவார்களோ என்ற அச்சத்தில், அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பிக்க, தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டுள்ளது. உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

