தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை குறித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக் ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அரசுக்கு ரூ. 100 வருவாய் வந்தால், செலவு ரூ. 145 ஆகிறது என்றும், இது பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சித்திக் ஐஏஎஸ், 'ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 45 ரூபாய் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறையை சரிசெய்ய வருவாயை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நல்ல திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது' என்று உறுதியளித்தார்.
மாநிலங்களின் கடன் வாங்கும் உச்சவரம்பை மத்திய அரசுதான் நிர்ணயிக்கிறது என்றும், அவர்களின் அனுமதி இல்லாமல் மாநிலங்களால் கடன் வாங்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 'மத்திய அரசு அனுமதித்த அளவில்தான் தமிழ்நாடு அரசின் கடன் அளவு இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை' என்றும் அவர் கூறினார்.
தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது நிதி நிலைமை மோசமாக இருந்ததாகவும், தற்போதும் நிலைமை அப்படியேதான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டின் நிதி நிலைமை உடனடியாக சீராகும் என எதிர்பார்க்க முடியாது என்றும், ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்டுவது தவிர்க்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தையும் குறைக்க முடியாது என்றும், ரூ.100 வருவாயில் ரூ.64.4 தவிர்க்க முடியாத செலவாக உள்ளது என்றும் அவர் விளக்கினார்.