தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் கலந்துகொண்டார். இந்த விழாவில், அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, இளவரசன், முன்னாள் அமைச்சர் பச்சைமால், திருநெல்வேலி முன்னாள் மேயர் விஜயலட்சுமி, அதிமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி ஜான் மகேந்திரன், ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தவசி, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி உள்ளிட்டோர் தங்களை தவெக-வில் இணைத்துக் கொண்டனர். அவர்களை அமைச்சர் என்.ஆனந்த் கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றார். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, விஜய் தமிழன் பார்த்திபன், ராஜ்மோகன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், 'தவெக-வில் இணையும் அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். உங்களுக்குரிய பதவிகள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து உங்களுக்கு என்னென்ன பதவிகளைத் தர வேண்டும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார். எந்தவொரு அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ தவறு செய்தால், அடுத்த வினாடியே பதவியில் நீக்கப்படுவார்கள். அதுதான் தமிழ்நாடு முதலமைச்சர். தொகுதியில் மக்கள் பிரச்சனைகளைக் கூறினால் உடனடியாகத் தீர்வு காணப்படும். உங்களுடன் எப்போதும் இருப்போம்' என்று உறுதியளித்தார். மேலும், 'நாம் அனைவரும் இணைந்து வருகிற உள்ளாட்சித் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவோம்' என சபதம் ஏற்போம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
'இன்னும் 20 ஆண்டுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக இருப்பார். இதனால், மற்றவர்களுக்கு ஒரே பயம். இப்படியே விட்டுவிட்டால் அவ்வளவு தான் போச்சு என்று நினைக்கிறார்கள். ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்களும் உங்கள் மாதிரி சாதாரண தொண்டன் தான். நாங்கள் பாகுபாடு பார்க்க மாட்டோம். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் எங்களை அப்படித்தான் வழிநடத்துகிறார். மக்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கூறினால் அதற்கு தீர்வுக் காண தயாராக இருக்கிறோம்' என்றும் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தவெக-வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி, 'தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவும், நேர்மையான ஆட்சியைத் தரவும் தவெக செயல்படுகிறது. போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும், பெண்களின் பாதுகாப்பை உயர்த்தவும் விஜய் சிறந்த தலைவராக விளங்குகிறார். இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியாவை வழிநடத்தும் முக்கிய இடத்தில் தலைவர் விஜய் இருப்பார்' என உறுதியாகத் தெரிவித்தார். நகைச்சுவை நடிகர் சீனிவாசன், 'தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி இனி தமிழ்நாட்டில் தொடரும். தமிழ்நாடு சிங்கப்பூராக விரைவில் ஆக்கப்படும்' என்றார். ஆல் இந்தியா சிந்தாரிக் பெந்தோகஸ் சபைகளின் தலைவர் பேராயர் ஜோஸ்வா இமானுவேல், திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், மாற்றுப்பாதை தேவை என்றும் தெரிவித்தார்.