தமிழக முதல்வர் விஜய்யின் தனி செயலாளராக ‘The Route’ ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். திரையுலகில் முதல்வர் விஜய்யின் மேலாளராக ஜெகதீஷ் பழனிசாமி பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரின் நியமனத்திற்கான உத்தரவை தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஜெகதீஷ் பழனிசாமி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், '18 ஆண்டுகளுக்கு முன்பு, உங்களுடன் புகைப்படம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த தீவிர ரசிகனாக நான் இருந்தேன். இன்று, மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சரின் தனிச் செயலாளராக உங்கள் அருகில் நிற்கும் இந்த தருணம், வாழ்க்கை முழுமையடைந்ததை உணர்த்துகிறது. இன்று நான் யாராக இருக்கிறேனோ, அதற்கு முழு முதற்காரணம் நீங்கள்தான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'எவ்வளவு சோகமாக இருந்தாலும், உங்கள் முகத்தில் இருக்கும் ஒரு சிறு புன்னகை போதும், என் மனநிலையை முழுமையாக மாற்றி நேர்மறையான ஆற்றலைத் தந்துவிடும். என் கடினமான காலங்களில் நான் ஓடுவதற்கு நீங்கள் கொடுத்த அந்த உத்வேகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் கடவுளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தளபதி விஜய் அண்ணா. நீங்கள் தமிழக மக்களுடன் இணைந்து இன்னும் பல உயரங்களைத் தொடவும், உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்!' என்றும் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் விஜய்யின் அரசியல் தனி செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டது, அவரது விசுவாசத்திற்கும், நீண்டகால உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு, பலரையும் கவர்ந்துள்ளது.