நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, புதிய கட்சிக்கு மக்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதை விளக்க, “புது இடத்திற்குப் போகும்போது அங்கிருக்கும் தெரு நாய்கள் கத்தும், அதற்குப் பிடித்த மாதிரி பிஸ்கட் அல்லது பிரியாணி போட வேண்டும்” என்று ஒரு உதாரணத்தைக் கூறிப் பேசினார். லாரன்ஸின் இந்த “நாய்” உதாரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தவெக ஆதரவாளரும் சின்னத்திரை பிரபலமுமான தாடி பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்களை லாரன்ஸ் எப்படி ‘நாய்கள்’ என்று ஒப்பிடலாம் என பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'என்னுடைய சப்போர்ட் லாரன்ஸ் மாஸ்டருக்கு தான் என்று சொன்ன அத்தனை பேரையும் மனசு வருத்தப்படும் படி இரண்டு, மூன்று வார்த்தைகளை பிரயோகித்து பேசி இருக்கீங்க. நாய்ங்கன்னு சொல்றீங்க. பிஸ்கட்டு போட்ட சில நாய்ங்க சும்மா இருக்கும். பிரியாணி போட்ட சில நாய்ங்க சும்மா இருக்கும்னு சொல்றீங்க. இது ஒரு வார்த்தையா?' என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டீர்கள் என்றால், வார்த்தைகளை எவ்வளவு கவனமாக பயன்படுத்த வேண்டும். ஒரு ஆன்மீகவாதியாக இருக்கும் நீங்கள் பொதுவெளியில் இப்படியெல்லாம் பேசலாமா? இது மிகப்பெரிய தவறு. எப்படி நீங்கள் மக்களை நாய்கள் என்று சொல்வீர்கள்? இன்னும் தேர்தல் வரவில்லை. உங்களை வேட்பாளராகவும் அறிவிக்கவில்லை. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளால், உங்களை நம்பி வேட்பாளராக நிற்க வைப்பவர்களுக்கும் பெரிய பிரச்சனையை கொடுக்கும்.
எனவே நமக்கும், நம்மைச் சேர்ந்தவர்களுக்கும், நம்மை நம்பி ஒரு விஷயத்தை கொடுக்கிறவர்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. இனிமேலாவது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் என அறிவுரை கூறியுள்ளார் தாடி பாலாஜி. மேலும் மக்களுடன் மக்களாக ஒன்று கேட்கிறேன். நீங்கள் பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்பீர்கள் என்று நம்புகிறேன் எனவும் அந்த வீடியோவில் பேசியுள்ளார் தாடி பாலாஜி.
முன்னதாக விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் தாடி பாலாஜி பயணித்து வந்தார். விஜய்யின் புகைப்படத்தை நெஞ்சில் பச்சை குத்தி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். இதனையடுத்து திடீரென தவெகவில் இருந்து விலகினார். தொடர்ந்து லீமா ரோஸின் மகன் ஜோஸ் சார்லின் மார்டின் கட்சியான லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார் தாடி பாலாஜி. இதனிடையில் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்தும் அவர் விலகியது பரபரப்பினை கிளப்பியது. மீண்டும் அவர் தவெகவில் இணைய போகிறாரா என்ற கேள்விகளை எழுப்பியது. மற்றொரு பக்கம் தவெகவில் இருந்திருந்தால் தாடி பாலாஜியும் தற்போது ஒரு அமைச்சர் ஆகி இருக்கலாம் என சோஷியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.