தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு சம்பவத்தில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க நடத்தப்பட்ட சதி தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் கட்சி மாறுவதற்காக மர்ம நபர்கள் சிலர் பேரம் பேசிய புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார். இவர், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் தேர்தலுக்கு தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடுபவர் என தெரியவந்துள்ளது. திருநாவுக்கரசு அளித்த தகவலின் பேரில், கரூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்தான் யூடியூபர் திருநாவுக்கரசு, ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் கட்சி மாறுவது குறித்து பேரம் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், அதில் ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும், வாக்கெடுப்பின்போது தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் என்றும், அதற்காக ரூ.35 கோடி வரை தருவதாகவும் திருநாவுக்கரசு எம்எல்ஏ இளையராஜாவிடம் ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதற்கு எம்எல்ஏ இளையராஜா மறுப்பு தெரிவித்ததோடு, இது குறித்து வெளியே தெரிவித்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் திருநாவுக்கரசு மிரட்டியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ.வாகிய தன்னிடம், தனது மக்கள் பணியை செய்ய விடாமல் தடுக்கும் வகையிலும், லஞ்சம் கொடுக்க முயன்றதோடு, தனக்கும் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுத்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்குப் பின்னணியில் செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ இளையராஜா புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால், அந்த கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் இணைந்து வருவதாகவும், குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்னும் முயற்சிப்பதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.