தமிழக சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற மதிமுக, தற்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக்கழக (தவெக) அரசுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க தவித்த தவெக அரசுக்கு, திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ், விசிக, ஐ.யு.எம்.எல். கட்சிகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றன. ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் மதிமுகவால் தவெக அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியவில்லை.
இந்நிலையில், வைகோ தலைமையில் இன்று நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், கூட்டணி நிலைப்பாடு குறித்து உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, மதிமுக எம்எல்ஏக்கள் இருவரும் ராஜினாமா செய்யுமாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், நாளை (27.06.2026) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாளை ஜூன் 27ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை வைகோ அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் வெளியேறிய நிலையில், மதிமுகவும் வெளியேறுவதாக வரும் செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதுவரை திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த மதிமுக, இனி தவெக அரசுக்கு ஆதரவாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடீர் திருப்பம் தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.