நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், குறிப்பாக வட மற்றும் மத்திய இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.
தெலுங்கானாவிலும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் வெயிலின் தாக்கத்தால் 22 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாரங்கல் மாவட்டத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்தனர். இங்கு அதிகபட்சமாக 46.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
மேலும், மகபூப்நகர் மாவட்டத்தில் 3 பேரும், ஜெய்சங்கர் பூபால பள்ளி மாவட்டத்தில் 2 பேர் என மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயிரிழப்புகள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளவும், உடல் நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ளவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.