நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது தொடர்பாக, அவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணையைத் தடை செய்யக் கோரியும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், உயர்நீதிமன்றம் முதலில் தடையை விதித்து, பின்னர் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அப்போதைய திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (தற்போது டி.ஐ.ஜி.) வருண்குமார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சீமான் தரப்பு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. வருண்குமார் தரப்பில் நீனா ஆர். நரிமன் ஆஜராகி வாதாடினார்.
இதை பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், வருண்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும், இந்த மனுவின் விசாரணை விரைந்து நடைபெறும் என்றும் தெரிவித்தது. மேலும், வழக்கின் விசாரணையை வரும் மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.