‘காந்தாரா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, தேசிய அளவில் கவனம் பெற்ற நடிகையாக உயர்ந்திருக்கும் ருக்மிணி வசந்த், தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் சித்தரிக்கப்பட்ட தனது கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்படுவது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனாவுக்குப் பிறகு 'நேஷனல் கிரஷ்' என்றழைக்கப்படும் ருக்மிணி வசந்த், நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘மதராசி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். தற்போது நடிகர் யாஷின் ‘டாக்ஸிக்’ மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். மேலும், தமிழில் இரண்டு புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், அவர் நீல நிற பிகினியில் இருப்பது போன்ற, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள ருக்மிணி வசந்த், 'என்னைப் போன்று ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்படுவதை நானும் என் குழுவினரும் கண்டறிந்துள்ளோம். இந்த படங்கள் முற்றிலும் போலியானவை மற்றும் புனையப்பட்டவை என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். இதுபோன்ற சித்திரிக்கப்பட்ட படங்களை உருவாக்குவதும் பரப்புவதும் பொறுப்பற்ற செயலாகும். மேலும் இது கடுமையான தனியுரிமை மீறலாகும்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'நாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, இந்த படங்களை உருவாக்கி பரப்பியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுப்போம். இதுபோன்ற பதிவை பகிர்வதில் இருந்து விலகி இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்' என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.