தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
முன்னதாக, தமிழகம் முழுவதும் பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் செயல்படும் 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
முதல்வரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 45 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான பட்டியல் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை நேற்று மாலை அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், 'முதல்வரின் உத்தரவுப்படி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடை உடனடியாக மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டுள்ள மற்ற கடைகளும் அடுத்த 15 நாட்களுக்குள் படிப்படியாக மூடப்படும்' என்று தெரிவித்தனர்.
பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மதுக்கடைகள் இருப்பதால் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும், தேவையற்ற சச்சரவுகளும் ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது. தற்போது இந்தக் கடை மூடப்பட்டுள்ளதால் பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.