தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை இந்தப் பொறுப்பில் இருந்த அவினாஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது சென்னை, வடக்கு மண்டல ஐ.ஜி.யாக செயல்பட்டு வரும் அஸ்ரா கர்க், இனி உளவுத்துறை ஐ.ஜி.யாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அவினாஷ்குமார் இந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
2004 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவைச் சேர்ந்த அஸ்ரா கர்க், நேர்மையான மற்றும் திறமையான அதிகாரி என்ற நற்பெயரைப் பெற்றவர். இதற்கு முன்பாக, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முன்பாக, தமிழக அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பதற்றமான சூழல்கள் நிலவி வரும் நிலையில், முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. அஸ்ரா கர்க்கின் அனுபவம் உளவுத்துறைக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.