உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2021 முதல் 2026 வரையிலான தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத் துறையில் அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைக்காமலேயே பணம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் 2022ல் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில், கரூரில் சாலை அமைக்கப்படாமல் 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 25ஆம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டை லாப்தி காலனியில் உள்ள எ.வ.வேலு வீடு உட்பட நான்கு இடங்களிலும், கரூரில் ஏழு, திண்டுக்கல்லில் இரண்டு, கோவையில் இரண்டு, திருப்பூரில் ஒன்று என மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. எ.வ.வேலுவின் வழக்கறிஞர், அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குறிப்பாக இருதய சிகிச்சை பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.