தமிழக அரசியலில் மறைமுக பேரம் வேண்டாம், வெளிப்படையான ஆதரவு மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெறும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக அரசு எந்தவிதமான குதிரை பேர அரசியலிலும் ஈடுபடவில்லை என்பதை முதலமைச்சர் அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை நிபந்தனையின்றி வெளிப்படையாக தெரிவித்ததைப் போலவே, அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி தங்கள் ஆதரவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் குதிரை பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் யார்?' என்ற கேள்விக்கும் முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும். அதன் பின்னணியில் எந்தவிதமான குதிரை பேரம் நடக்கவில்லை என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்வதாக பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் நம்பிக்கையைப் பெற வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும், மறைமுக அரசியல் ஒருபோதும் எடுபடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்பதே தேமுதிகவின் கோரிக்கையாகும்.