டாஸ்மாக் கடைகளில் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி கொள்ளையடிக்கப்படுவதாக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வரின் பேச்சு, 'ரீல்ஸ்'களுக்கு பயன்படுமே தவிர, நிஜமான அரசியலுக்கு உதவாது என அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 40 நாட்களாக முதல்வர் விஜய் மௌனம் காத்து வந்த நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் தனது அரசியல் எதிரிகளை துவம்சம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மீண்டும் அதே பழைய குற்றச்சாட்டையே திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். திரைப்படங்களில் வசனகர்த்தா எழுதியபடி பேசிவிட்டுச் செல்லலாம். ஆனால், சட்டமன்றத்தில் ஆதாரமின்றிப் பேசக்கூடாது.
டாஸ்மாக் மூலம் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி கொள்ளையடிக்கப்படுவதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார். எந்தக் கட்சிக்கு இந்த நிதி சென்றது என்பதற்கான ஆதாரத்தையும் அவர் வெளியிட்டிருந்தால், அது அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக அவர் மேடைகளில் பேசிவரும் குற்றச்சாட்டு இது. மே 10ஆம் தேதிக்குப் பிறகு முதல்வரான பிறகு, இந்த முறைகேடு குறித்து முழுமையாக ஆய்வு செய்து, உண்மைகளை சட்டமன்றத்தில் வெளியிட்டிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும்.
ஆட்சிக்கு வந்த பிறகும் தேர்தல் வியூக வகுப்பாளர்களின் ஆலோசனைகளைப் பெறுவது ஆரோக்கியமானது அல்ல. முதல்வர் விஜய்யின் இன்றைய சட்டமன்றப் பேச்சு, வெறும் 'ரீல்ஸ்'களுக்கு மட்டுமே பயன்படும். நிஜமான அரசியலுக்கு உதவாது. தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்த்த அவரது குற்றச்சாட்டு, வெறும் 'புழுதிக்காற்றாகவே' போய்விட்டது" என்று கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.