ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் சறுக்கல்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கியுள்ளார். பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது ஏமாற்றம் அளித்தாலும், அணி எதிர்கொண்ட காயப் பிரச்சனைகளை விமர்சகர்கள் யாரும் கருத்தில் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் அனுபவமிக்க வீரராக உள்ளார். அவரது தலைமையில் சிஎஸ்கே அணி 2025-ஆம் ஆண்டு சீசனில் 10-வது இடத்தையும், 2026-ஆம் ஆண்டு சீசனில் 8-வது இடத்தையும் பிடித்து பின்னடைவைச் சந்தித்தது. சஞ்சு சாம்சனின் வருகை மற்றும் கெய்க்வாட்டின் சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் ஆகியவை அவர் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளன.
சவால்கள் நிறைந்த கடந்த இரண்டு சீசன்கள் குறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், 'கடந்த இரண்டு ஆண்டுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. ஆனால் ஒரு சீசனை பாதிக்கும் சில காரணிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 2025-இல் நான் கேப்டனாக இருந்து, பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாட முடியாமல் போனது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. கடந்த ஆண்டிலும், எங்கள் பிளேயிங் லெவனில் இருந்த நான்கு அல்லது ஐந்து முக்கிய வீரர்கள் பாதி சீசனைத் தவறவிட்டனர். தோனி, ஜேமி ஓவர்டன், நாதன் எல்லிஸ், ஆயுஷ் மாத்ரே, கலீல் அகமது மற்றும் ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோர் சிஎஸ்கே அணியில் சில போட்டிகளையோ அல்லது முழு சீசனையோ தவறவிட்டனர்' என்று கூறினார்.
அணியின் இந்த செயல்பாட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியுடன் ஒப்பிட்டு கெய்க்வாட் பேசியுள்ளார். 'ஆர்சிபி போன்ற வெற்றிகரமான அணிகளிலிருந்து கூட மூன்று அல்லது நான்கு முக்கிய வீரர்களை நீக்கிவிட்டால், அது நிச்சயமாக அணியின் செயல்பாட்டைப் பாதிக்கும். இந்த உண்மைகளை பலர் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஐபிஎல் என்பது முடிவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடர். சிஎஸ்கே கடந்த 15 அல்லது 16 சீசன்களாக சிறப்பாக செயல்பட்டு வருவதால், ஒவ்வொரு ஆண்டும் அணி சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்' என்று அவர் கூறினார்.
சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பொறுமையாக இருக்குமாறு கெய்க்வாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். 'சில நேரங்களில் நாம் நினைத்தபடி காரியங்கள் நடப்பதில்லை. ஆனால், ரசிகர்கள் விரும்பும் நிலைக்கு அணியை மீண்டும் கொண்டு வர அனைத்து வீரர்களும் கடுமையாக உழைத்து வருகிறோம். விரைவில் நாம் அந்த நிலையை எட்டுவோம் என்று நம்புகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.