தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக சீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக முக்கிய அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை முன்னாள் காவல் ஆணையராக இருந்த அருண், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில், நடிகர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்ததை அடுத்து, நிர்வாக வசதிக்காகவும், செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு முன்னர், உளவுத் துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். அங்கு பணியிலிருந்த அபின் தினேஷ் மோடக்குக்கு சிபிசிஐடி பிரிவு கூடுதல் டிஜிபி பணி வழங்கப்பட்டது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளுக்கும் அடுத்தடுத்து பணியிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அன்பு ஆகியோர் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக உள்துறை செயலர் மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக இருந்த மகேஷ்வர் தயாள் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி-யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டிஜிபி அருண் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.அன்பு மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி இடமாற்றங்கள் காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.