சென்னை: தமிழக மக்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசு, பெண்களின் நலனை முதன்மையாகக் கருதி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. மாதத்தின் 15-ம் தேதி இந்தத் தொகை வரவு வைக்கப்படுவது வழக்கம் என்பதால், பெண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் கீழ், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகையான ரூ.1,000 ஆனது கடந்த 14-ம் தேதி அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருந்தது. இதுவும் மாணவச் செல்வங்களுக்கு ஒரு நற்செய்தியாக அமைந்தது. கடந்த திமுக ஆட்சியில், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தகுதிவாய்ந்த சுமார் 1.31 கோடி பெண்களின் வாழ்வில் ஒரு முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், திமுக ஆட்சியின்போது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ.3,000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பிப்ரவரி 13 ஆம் தேதி வரவு வைக்கப்பட்டிருந்தது. அப்போது, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாதாந்திர உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தற்போது, புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிப்படி மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது எப்போது என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து முதல்வர் விஜய், 'மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைக்க அவகாசம் தேவை. நடப்பு மே மாதத்திற்கான தொகை விரைவில் வரவு வைக்கப்படும்' என அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை உயர்வு குறித்த அரசின் அடுத்தகட்ட அறிவிப்பை பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.