திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தஞ்சையில் நடைபெற்ற பூண்டி கலைவாணன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் பிரச்சாரம் செய்து, திமுக தோல்வியடைந்ததாகக் குற்றம் சாட்டினார். "சிறு பிள்ளைகளையும், குழந்தைகளையும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி, அவர்களின் பெற்றோர்களிடம் திட்டமிட்டு வாக்களிக்கச் செய்து ஆட்சிக்கு வந்துள்ளனர். இது நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது," என்று அவர் தெரிவித்தார்.
நடந்து முடிந்த தேர்தலில் திமுக சந்தித்த தோல்வி குறித்து பேசிய ஸ்டாலின், "திமுக முடிந்துவிட்டது என சிலர் இரங்கற்பா பாடுகின்றனர். ஆனால், 1949 முதல் திமுக பல தேர்தல்களை சந்தித்துள்ளது. தோல்வியிலிருந்து ஃபீனிக்ஸ் பறவையாக எழுவதே திமுகவின் வழக்கம்" என்று குறிப்பிட்டார். சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், திமுக ஆட்சியில் இருக்கும்போதே எதிரணியினர் வெற்றி பெற்றபோது வாழ்த்து தெரிவித்ததாகவும், திமுகவின் திட்டங்களைத் தொடர வேண்டும் எனக் கோரியதாகவும், அவை நிறைவேற்றப்படுவதாகவும் கூறினார்.
"நாம் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை யாராலும் மாற்றிவிட முடியாது. இந்தத் திட்டங்கள் தொடரும் வரை திராவிட மாடல்தான் ஆட்சியில் இருக்கும். தேர்தலில் தோல்வியடைந்ததும் நான் சோர்வடையவில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளோம். அதற்காக ஒரு இணையதளமும் தொடங்கியுள்ளோம், அதில் அனைவரும் கருத்து தெரிவிக்கலாம்" என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
"தேர்தலுக்கு எந்தப் பணிகளையும் செய்யாமல், மக்களைச் சந்திக்காமலேயே எதிரணியினர் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளனர். அவர்களின் வெற்றிக்குக் காரணம் சமூக வலைதளங்கள்தான். இனி நாம் உஷாராக இருந்து, அதையும் முறியடிக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாம் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று பணியாற்றுங்கள். எதிர்க்கட்சியாக சிறப்பாகச் செயல்படுவோம்" என்றும் அவர் உறுதியளித்தார்.
