ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) மீதான தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். யு.ஏ.இ அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இந்த கருத்துக்களை அவர் வலியுறுத்தினார்.
ஐந்து நாள் பயணமாக 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தனது பயணத்தின் முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்தார். அங்கு இரண்டரை மணி நேரம் மட்டுமே செலவழித்த அவர், இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவது, வர்த்தகத்தை மேம்படுத்துவது, மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் எரிபொருள் விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தார். இந்த சந்திப்பின்போது, எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இந்தியாவில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்போவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி மேலும் கூறுகையில், 'யு.ஏ.இ மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால், இந்த சூழலை யு.ஏ.இ நிதானத்துடன் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப இந்தியா முழு ஆதரவை அளிக்கும்' என்று குறிப்பிட்டார். அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றமான சூழலின்போது, அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து யு.ஏ.இ மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ராணுவ தளங்கள் மட்டுமல்லாமல் பொதுச் சொத்துக்களும் சேதமடைந்தன.
யு.ஏ.இ உடனான முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்த பிறகு, பிரதமர் மோடி தனது அடுத்தகட்ட பயணமாக நெதர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த சுற்றுப்பயணம், ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.