சென்னை: தமிழகத்தில் புதிய திமுக தலைமையிலான அரசின் அமைச்சரவை விரைவில் அமையவுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள் பதவி கிடைக்கும், யாருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சத்தியமூர்த்தி பவனில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், கடுமையான போட்டிக்கு மத்தியில் மயிலாடுதுறை தொகுதியில் ஜமால் முகமது யூனுஸ், மேலூரில் பி. விஸ்வநாதன், குளச்சலில் தாரகை கத் பர்ட், விளவங்கோட்டில் பிரவீன் மற்றும் கிள்ளியூரில் எஸ். ராஜேஷ் குமார் என 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, திமுக ஆட்சி அமைக்க இந்த 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் உடனடியாக தங்களது ஆதரவுக் கடிதத்தை வழங்கினர்.
முன்னதாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, 'கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படும்' என்று உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியின்படி, புதிய அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர்கள் பதவிகளை வழங்க திமுக தலைமை முன்வந்துள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் கே.சி. வேணுகோபால், தினேஷ் குண்டு ராவ் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் உறுதி செய்துள்ளனர். இதற்கிடையில், வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்குள் அமைச்சர் பதவியை பெற டெல்லி வரை தீவிரமாக காய்களை நகர்த்தி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களின் ஆதரவுடன் அமைச்சர் பதவியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம், மேலூர் எம்.எல்.ஏ. பி. விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பரிந்துரையின் மூலம் அமைச்சர் பதவியை பிடிக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். சீனியாரிட்டி மற்றும் மேலிட செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில், ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவருக்கும் அமைச்சர் பதவி கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.