2026 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்தத் தோல்வி, அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மைதானத்தில் அமர்ந்து தனது அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதைக் கண்டு அவர் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.
சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி, 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குறிப்பாக, 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஹைதராபாத் பந்துவீச்சை ஆரம்பத்திலேயே நிலைகுலையச் செய்தார். பின்னர் பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் சிறப்பாக செயல்பட, ஹைதராபாத் அணி 4.4 ஓவர்களிலேயே 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
மைதானத்தில் இருந்த காவ்யா மாறன், தனது அணி விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்தார். ஆட்டத்தின் 10 ஓவர்கள் முடிவதற்குள்ளேயே வெற்றி வாய்ப்பு நழுவியதை உணர்ந்த அவர், மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார். வழக்கமாகத் துடிப்புடன் அணியை உற்சாகப்படுத்தும் அவர், தொடரிலிருந்து தனது அணி வெளியேறியதை எண்ணி மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் காவ்யா மாறன் மற்றும் அணியை நோக்கி சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக, லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் வெற்றி பெற்றபோது, இஷான் கிஷன் உற்சாக மிகுதியில் சிஎஸ்கே ரசிகர்களைக் குறிவைத்து செய்த சில செயல்களைச் சுட்டிக்காட்டி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். வெற்றியில் எப்போதும் அடக்கம் தேவை, காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணியை லீக் சுற்றில் இரண்டு முறை வீழ்த்தியிருந்த ஹைதராபாத், மிக முக்கியமான நாக்-அவுட் போட்டியில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 38 ரன்கள் எடுத்தார். 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம், அனுபவம் வாய்ந்த பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியின் இறுதிப்போட்டி கனவைத் தகர்த்துவிட்டது.