இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கும், முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பலுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கசப்பான சம்பவங்களை கங்குலி இன்னும் மறக்கவில்லை என்பதை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய சவுரவ் கங்குலி, பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஆதரவு கோரி உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டும் மனுவில் கையெழுத்திடுமாறு கிரேக் சாப்பல் தனக்கு மெசேஜ் அனுப்பியதாகக் கூறினார். ஆனால், அதற்கு தான் பதிலளிக்கவில்லை என்றும், நேர்மையற்ற மனிதர்களுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் கங்குலி திட்டவட்டமாகத் தெரிவித்தார். 'தவறான வழியில் பிரச்சினைகளைத் தீர்க்க நினைப்பவர்களை எனக்குப் பிடிக்காது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2011-ல் நடந்த ஒரு சம்பவத்தையும் கங்குலி வெளிப்படுத்தினார். அப்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கங்குலிக்கு, சாப்பல் ஒரு மெயில் அனுப்பியுள்ளார். அதில், கங்குலி கேப்டனாகவும், தானும் பயிற்சியாளராகவும் இருந்து கொல்கத்தா அணியை வழிநடத்த விரும்புவதாக சாப்பல் குறிப்பிட்டிருந்தார். இதை கிண்டலாகக் குறிப்பிட்ட கங்குலி, 'தாதா (கங்குலி) முட்டாள் இல்லை. ஒருமுறை வேண்டுமானால் நான் ஏமாந்திருக்கலாம், ஆனால் இரண்டாவது முறையும் ஏமாற மாட்டேன்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக, 2005-ல் கங்குலியின் பரிந்துரையின் பேரிலேயே சாப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், பின்னர் கங்குலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குமாறு பிசிசிஐ-க்கு சாப்பல் கடிதம் எழுதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அணியிலிருந்து நீக்கப்பட்ட கங்குலி, போராடி மீண்டும் அணியில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.