மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநில முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர், 'எங்கள் மாநில எல்லைக்குள் மேகதாது அணையை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது' என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், மேகதாது அணை குறித்தும் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை தொடர்பான அமைப்புகள் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள போதிலும், கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகிறது. இத்தகைய சூழலில், கர்நாடக பின்னணியை கொண்ட ஒருவரை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான நபர்கள் பலர் இருந்தும், இந்த நியமனம் ஏன் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்து வெங்கடநாராயணாவின் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.