தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்களே ஆன நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சுயநலத்திற்காகவும், சுய தேவைகளுக்காகவும் ராஜினாமா செய்து தொகுதி மக்களை ஏமாற்றியுள்ளது கண்டனத்திற்குரியது என பா.ஜ.க.வைச் சேர்ந்த சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுப் பணியை விட்டுவிட்டு ராஜினாமா செய்வது தொகுதி மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், இது கண்டிக்கத்தக்க செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மறுதேர்தல் வரும் சூழல் ஏற்பட்டு, ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட நேரிட்டால், அந்த சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் செலவு மற்றும் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு ஆகியவற்றை, ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து அபராதத் தொகையாக வசூல் செய்ய வேண்டும் என்றும் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தொகுதியில் மறுதேர்தல் வரும்போது, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.