தற்போதைய சூழலில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என ஆளுநர் அர்லேகர் மறுத்துவிட்டார்.
புதன்கிழமையன்று மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்த விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரி தங்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நேற்றிரவு சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியபின் வெள்ளிக்கிழமையன்று மீண்டும் த.வெ.க. தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்தார்.
ஆளுநர் அர்லேகர் அழைப்பை ஏற்று மக்கள் மாளிகைக்கு விஜய் சென்றார். ஆட்சி அமைப்பது தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் ஆளுநர் – விஜய் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அப்போது 113 எம்.எல்.ஏ.க்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? என்றும் வேறு எந்த கட்சி த.வெ.க. அரசை ஆதரிக்கும்? என்றும் ஆளுநர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும், 113 எம்.எல்.ஏ.க்களை வைத்து நிலையான அரசு அமைக்க முடியுமா? என வினவிய ஆளுநர், பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என எப்படி நம்புகிறீர்கள்? பெரும்பான்மை கிடைத்துவிடும் எனும் யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியுமா? என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்ட ஆளுநர் மாளிகை, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை த.வெ.க. பெறவில்லை என்பதை ஆளுநர் விஜயிடம் விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.