இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு தொடர்ச்சியாக ஓய்வளித்து புதிய வீரர்களை மாற்றுவது, இந்திய அணித் தொப்பியின் மதிப்பை குறைப்பதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பிசிசிஐ-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு மாதமாவது கட்டாய ஓய்வு அளிக்க புதிய விதியைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி முடிந்து 6 நாட்களிலேயே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் தொடங்கின. சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி இத்தொடர்களை வென்ற போதிலும், பிசிசிஐ-யின் தொடர்ச்சியான போட்டி அட்டவணை மற்றும் வீரர்களை சுழற்சி முறையில் மாற்றி அமைக்கும் கொள்கை குறித்து கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். தொடர்ச்சியான போட்டிகளால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு, லக்னோ மற்றும் சென்னையில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளின் போது மைதானங்கள் பாதியளவு காலியாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து தனது கட்டுரையில் கவாஸ்கர் எழுதியதாவது: 'ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே போன்ற நாடுகளுக்கு பிசிசிஐ ஒரு மூத்த அண்ணன் போல உதவி செய்வதை வரவேற்கிறேன். ஆனால், நமது வீரர்களின் உடற்தகுதியும் முக்கியம். இந்திய அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை என்பதால் வீரர்களை மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இது இந்திய அணித் தொப்பியின் மதிப்பை குறைப்பதாக உள்ளது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வளித்து, அவர்களுக்கு மாற்றாக விளையாடுவதால் மட்டும் ஒருவருக்கு இந்திய தொப்பி கிடைத்துவிடக் கூடாது. அதை அவர்கள் போராடிப் பெற வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கில், ராகுல் சதம் அடித்தனர். மானவ் சுதார் சிறப்பாக அறிமுகமானார். ஆனால், பும்ராவுக்கு ஏன் ஓய்வளித்தார்கள்? அவர் விளையாடி இருந்தால் தனது விக்கெட் எண்ணிக்கையை மேலும் அதிகரித்திருப்பார் அல்லவா? காயம் ஏற்பட்டால் தவிர, இந்திய அணி விளையாடும் போதெல்லாம் சிறந்த 11 வீரர்களுடனே களம் இறங்க வேண்டும். பணிச்சுமை காரணமாக வீரர்களுக்கு ஓய்வளிப்பதை தவிர்க்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க ஏ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் போட்டிகளைப் பயன்படுத்தலாம். ஆனால், நமது முக்கிய வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு மாதமாவது முழுமையான ஓய்வு வழங்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.