2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார். இந்த அணித் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, ரவி சாஸ்திரி இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவரானால் மட்டுமே இதுபோன்ற ஒரு அணியை அவரால் தேர்வு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ரவி சாஸ்திரி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அணியில் சேர்த்துள்ளதை மிகவும் சுவாரஸ்யமான தேர்வாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கேஎல் ராகுலுடன் ரிஷப் பண்ட்டையும் சேர்த்துள்ளதை அவர் ஒரு வித்தியாசமான அணியாக வர்ணித்துள்ளார். ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்திருந்தாலும், அவர் அணியில் இடம் பிடிப்பாரா என்பது கடினமான கேள்வி என்றும், ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்ட் சற்று அநியாயமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்தார். விளையாட வாய்ப்பளிக்காமலேயே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், ஆனால் உலகக்கோப்பைக்கு மிக அருகில் இருக்கும் இந்த நேரத்தில் அவர் அணியில் இடம் பெறுவாரா என்பது சந்தேகமே என்றும், தற்போது இஷான் கிஷனின் ஃபார்ம் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இரண்டு இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களுடன் ஹர்திக் பாண்டியாவையும் ரவி சாஸ்திரி தனது அணியில் சேர்த்துள்ளார். நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு அவரது அணியில் இடமில்லை. அனுபவம் வாய்ந்த சிறந்த ஆல்-ரவுண்டர்களைத் தேர்வு செய்திருப்பது சரியான முடிவுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
பும்ரா, சிராஜ், குல்தீப் ஆகியோரின் தேர்வில் எந்த கேள்வியும் இல்லை என்றும், ஆனால் ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவருமே சுவாரஸ்யமான தேர்வுகள் என்றும் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார். ஷமி, புவனேஷ்வர், பண்ட் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரின் சேர்க்கை இந்த அணியை முற்றிலும் வித்தியாசப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அணிக்கு 10க்கு 8 புள்ளிகள் வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரவி சாஸ்திரியே தேர்வுக்குழு தலைவராக மாறினால் ஒழிய, இதுபோன்ற ஒரு அணி தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்றே தான் நினைக்கிறேன் என்றும், மேலும், இந்த அணியில் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது ஒரு குறையாகத் தெரிகிறது என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.
ரவி சாஸ்திரி தேர்வு செய்ததாகக் கூறப்படும் இந்திய அணி விவரம்: ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ்.
தற்போதைய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் 2026 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிசிசிஐ-யின் தேர்வுக்குழுவின் அடுத்த தலைவராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
