மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவித்தார். மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட 300 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்குவார் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்து திமுகவிடம் அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பினார். ’30 ஆயிரம் கோடியை ஒரு குடும்பம் எடுத்துக் கொண்டு சென்றதாக’ அவர் பேசியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக திமுக ஆய்வு செய்ய தயாரா என அமைச்சர் கேட்டார். ‘Party Fund’ என்றதும் திமுகவிற்கு பயம் ஏற்பட்டதாகவும், திருடனுக்கு தேள் கொட்டியது போல் அவர்கள் வெளிநடப்பு செய்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆட்சியில் பணம் கொடுக்காமல் இடமாற்றம் (Transfer) நடந்ததா என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பினார். எம்ஜிஆர் பேசியபோது அவரை கிண்டல் செய்தவர்கள், அதே டெக்னிக்கை இன்றும் பின்பற்றுவதாக அவர் குறிப்பிட்டார். இபிஎஸ்ஸை சந்திக்க நேரம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் அன்றைய சூழ்நிலை காரணமாக சந்திக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்பு தலைமைச் செயலகத்திற்கு சாதாரண மக்கள் வருவதில்லை என்றும், அமைச்சர்களுக்கு பணம் வாங்கித்தரும் தரகர்கள் மட்டுமே அங்கு சுற்றி வந்ததாகவும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். ஆனால் இன்று, மக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க அமைச்சர்களைச் சந்தித்து மனு அளிக்க தலைமைச் செயலகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.