திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சூர்யா டிம்பர் டிப்போ பின்புறம் உள்ள கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை நேரத்தில், சூர்யா டிம்பர் டிப்போவில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில், மேக்கிங் செல்வம் (வயது 28) என்பவர், ஒரு மினி லோடு வாகனத்தில் சுமார் 35 கிலோ எடை கொண்ட 38 மூடை பீடி இலைகளை இலங்கைக்கு படகு மூலம் கடத்த கொண்டு வந்துள்ளார். இதனை கியூ பிரிவு போலீசார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மினி லோடு வாகனத்தை ஓட்டி வந்த மேக்கிங் செல்வம் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.