சென்னை: கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையம் விரைவில் மூடப்படும் நிலையில், அதன் 36 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகங்கள் அல்லது பிரமாண்ட வணிக மால் அமைக்கலாம் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வணிக நோக்க திட்டங்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதாலும், குத்தம்பாக்கத்தில் மற்றொரு புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதாலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால், அந்த 36 ஏக்கர் நிலத்தில் நகர்ப்புற பசுமைப் பூங்கா, வணிக வளாகங்கள், அலுவலங்கள், திரையரங்குகள், உணவகங்கள் கொண்ட வளாகம், அல்லது பிரமாண்ட வணிக மால் என மூன்று திட்டங்களை CMDA தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டங்கள் விரைவில் அரசின் ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளன.
முன்னதாக, திமுக ஆட்சியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு இந்த இடத்தை தாரை வார்த்து, பிரமாண்ட வணிக மால் அமைக்க திட்டமிடப்பட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்ததால், பசுமைப் பூங்கா அமைப்பது உள்ளிட்ட மேலும் இரு திட்டங்களை CMDA உருவாக்கியுள்ளது. இருப்பினும், வணிக மால் அமைக்கும் யோசனையை திமுக அரசு இன்னும் கைவிடவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர் நிலத்தையும், அதைச் சுற்றியுள்ள ஆம்னி பேருந்து நிலையம் அமைந்துள்ள 30 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து மொத்தம் 66 ஏக்கரில் ஒரு பெரிய பசுமைப் பூங்காவை அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் தனிநபர் பசுமை நிலப்பரப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும், உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் பெரிய பூங்காக்கள் இருப்பதை ஒப்பிடுகையில், சென்னைக்கு இது போன்ற பசுமைப் பூங்காக்கள் அவசியம் என்றார்.
கிண்டியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டாலும், அது சென்னையின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும், கோயம்பேட்டில் பூங்கா அமைப்பது அண்ணா நகர், முகப்பேர், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்குப் பயனளிக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார். எனவே, வணிக வளாகங்கள் மற்றும் மால் அமைக்கும் திட்டங்களைக் கைவிட்டு, 66 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.