தூத்துக்குடியில் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதமாகி, மனைவியே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல், அவரது கணவர் மற்றும் அவரது தம்பி உதவியுடன் தோட்ட்த்தில் புதைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த 62 வயதான செல்லத்துரை என்பவரின் மகள் பிருந்தாதேவி (32). இவருக்கு கிருஷ்ணகுமார் என்பவருடன் திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், பிருந்தாதேவி குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற பிருந்தாதேவி வீடு திரும்பாததால், அவரது தந்தை செல்லத்துரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பிருந்தாதேவி பக்கத்து வீட்டில் வசிக்கும் கட்டிட ஒப்பந்ததாரர் மாரிமுத்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் அவரது மனைவி சரவணப் பிரியா (34) வீட்டிற்கு சென்றதும், பின்னர் வெளியே வரவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மாரிமுத்து மற்றும் சரவணப் பிரியாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பிருந்தாதேவி கொலை செய்யப்பட்டது அம்பலமானது. பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி மாரிமுத்து வீட்டிற்கு வந்து சென்ற பிருந்தாதேவிக்கும், மாரிமுத்துவுக்கும் நாளடைவில் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பிருந்தாதேவி மாரிமுத்துவுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சரவணப் பிரியாவுக்கும், பிருந்தாதேவிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணப் பிரியா, பிருந்தாதேவியை தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது கணவர் மாரிமுத்து மற்றும் அவரது தம்பி கார்த்திக் உதவியுடன் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் உள்ள தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் புதைத்துள்ளனர்.
இதையடுத்து சரவணப் பிரியா மற்றும் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். உடலை ஏற்றிச் சென்ற காரையும், தலைமறைவான கார்த்திக்கையும் தேடி வருகின்றனர். மாரிமுத்துவை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், தோட்ட்த்தில் உடலை புதைத்த இடத்தை கண்டுபிடித்தனர். இரவு நேரமானதால், இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பிருந்தாதேவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.