முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை (ED) விசாரணைக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் (PMLA) கீழ், ஒரு பொது ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசின் முன் அனுமதி பெறுவது அவசியம். இதற்காக, அமலாக்கத்துறை கடந்த மே மாதம் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியது. இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, முதல்வர் ஜோசப் விஜய்யின் ஒப்புதலுடன், செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதி கோரி ஆளுநர் ஆர்.வி. அர்லேகருக்கு முறைப்படி கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், ஆளுநர் அர்லேகர் தற்போது அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும் செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.